ஜொகூர் பாரு, ஜூன் 18-
மலேசியாவிடமிருந்து சிங்கப்பூருக்கு கைநழுவிப் போன ஜோகூர் கடலில் வீற்றிருக்கும் பவளப்பாறைத் தீவான பத்து பூத்தே மற்றும் இதர தீவுகளான மிடில் ராக்ஸ், சவுத் லெட்ஜ் ஆகியவற்றின் இறையாண்மை விவகாரத்தை ஆய்வு மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம் தனது அண்மைய விசாரணை அறிக்கையை மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் சமர்ப்பித்துள்ளது.
நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதியும், அரச விசாரணை ஆணையத்திற்கு தலைமையேற்று இருப்பவருமான துன் முகமது ராஸ் ஷெரீப், இன்று காலையில் இஸ்தானா நெகாராவில் மாமன்னருடன் நடத்தப்பட்ட சுமார் ஒரு மணி நேர சந்திப்பின் போது இந்த அறிக்கையை ஒப்படைத்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி நெதர்லாந்து, The Hague- யில் அனைத்துலக நீதிமன்றம், பத்து பூத்தே தீவு, சிங்கப்பூருக்கு சொந்தமானது என்று தீர்ப்பு அளித்தது. அதேவேளையில் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள வீற்றிருக்கும் மிடில் ராக்ஸ் மலேசியாவை சேர்ந்தது என்று அது அறிவித்தது. பத்து பூத்தே தீவிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சவுத் லெட்ஜ் தீவு மீதான உரிமை, நாட்டின் கடல் எல்லைக்கு ஏற்ப தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது.
பத்து பூத்தே தீவு விவகாரத்தில் சிங்கப்பூருக்கு சாதகமாக அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மலேசிய மேல்முறையீடு செய்யாமல் போனதற்கு காரணம், நாட்டிற்கு இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்று இருந்த துன் மகாதீர் முகமது முகமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் காரணமாகும் என்று கூறப்படுகிறது.
அந்த மேல்முறையீட்டு மனுவை மீட்டுக்கொள்ளுமாறு துன் மகாதீர் உத்தரவிட்டதாக கூறப்படுவது தொடர்பில் அது குறித்து விசாரணை செய்வதற்கு மாமன்னரின் உத்தரவின் பேரில் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.








