பேரா, பத்து காஜாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் தனது மனைவியை கொலை செய்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் இன்று பிற்பகலில் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.
இக்கொலை தொடர்பில் இன்று பிற்பகல் 2 மணியளவில் கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து 36 வயதுடைய அந்த நபர், அக்கொலையை தாமே செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்து, போலீசாரிடம் சரண் அடைந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த கொடூர செயலுக்கு அந்த ஆடவர் பயன்படுத்திய கத்தி ஒன்றையும் போலீசார் மீட்டுள்ளனர். கணவன் மனைவிக்கு இடையில் நீடித்து வந்த குடும்பப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இருவரும் விவகாரத்து செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அந்த ஹோட்டல் அறையை வாடகைக்கு எடுத்தப் போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்ப்படுகிறது.
இக்கொலை தொடர்பில் கருத்துரைத்த பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன், இச்சம்பவத்திற்கு பின்னர் சம்பந்தப்பட்ட நபரே போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக வந்து, கொலை குறித்து தகவல் அளித்தாக குறிப்பிட்டார்.








