மலேசியர்கள் தங்களுக்கான அரசாங்க நிறுவனங்களின் இணையவழிச் சேவைகளை எளிதாகப் பயன்படுத்தும் வகையில், MyGOV மலேசியா செயலியில் செயற்கை நுண்ணறிவு முகவர் இணைக்கப்படவுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இலக்கவியல் சேவைகள் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் பொதுமக்கள் இலக்கவியல் மயமாக்கலின் பலன்களை எளிதாகப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை டாமன்சாரா டாமாயில் நடைபெற்ற மலேசிய இலக்கவியல் பயணம் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய கோபிந்த் சிங், தற்போதுள்ள தொழில்நுட்பத்தை நாம் கவனத்தில் கொண்டு, பயன்படுத்தும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் இன்றைய காலத்திற்கேற்ப இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
MyGOV மலேசியாவில் இணைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு முகவரானது, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அரசாங்க சேவைகளை மேம்படுத்தும் சமீபத்திய நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








