பினாங்கில் சியூஜெட்டியிலிருந்து 50 மீட்டருக்கும் குறைவான தொலைவில் அமைந்திருந்த 10 மரக் கட்டிடங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இன்று சனிக்கிழமை அதிகாலை சுமார் 1 மணியளவில் அங்கிருந்த பெட்ரோல் நிலையத்தின் பின்புறம் இத்தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், தீ வேகமாகப் பரவியதில் அதன் அருகிலிருந்த மறுசுழற்சி மையம் மற்றும் கார் பழுதுபார்ப்பு நிலையமும் தீப்பற்றின.
அங்கு பலமுறை வெடிப்புச் சத்தங்கள் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இதனையடுத்து, தீயை அணைக்க தீவிலும், நிலப்பகுதியிலும் இருந்து ஐந்திற்கும் மேற்பட்ட தன்னார்வ தீயணைப்புக் குழுக்கள் விரைந்தன.
எனினும், குறைந்த நீர் அழுத்தம் காரணமாக மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்தீவிபத்தால் ஏற்பட்ட சேதத்தின் முழு மதிப்பு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.








