ஆயுதம் மற்றும் தற்காப்புத் துறையில் செயல்படும் இரண்டு நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் கடனுதவி பெற்றுத்தர 30 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கேட்டுப் பெற்றதாக ஆலோசனை நிறுவனம் ஒன்றின் பெண் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
60 வயதைக் கடந்த அப்பெண், கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் கோலாலம்பூரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, நேற்று செப்டம்பர் 4 முதல் வரும் 10-ஆம் தேதி வரை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூமிபுத்ரா தொழில்முனைவோர் நிதித் திட்டத்தின் கீழ் மானியம் மற்றும் கடனுதவி பெற்றுத்தருவதற்காக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆயுதம் மற்றும் தற்காப்புத் துறை நிறுவன உரிமையாளரிடம் இருந்து சுமார் 30 ஆயிரம் ரிங்கிட் லஞ்சமாக கேட்டுப் பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வழக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009, பிரிவு 16(a)(A) ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.








