சபா மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததுடன், குடிநுழைவு அதிகாரி ஒருவரின் கடமையை நிறைவேற்றுவதில் தடையாக இருந்ததாகக் கூறி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது கோத்தா கினபாலு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பாளரின் உதவி வழங்கப்பட்ட போதிலும், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அந்நபர் தெரிவித்ததால், அவரிடமிருந்து ஒப்புதலையோ, மறுப்பையோ நீதிமன்றத்தால் பதிவு செய்ய முடியவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், தனது சார்பில் ஆஜராக வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முறையான ஆவணங்கள் இன்றி சபாவிற்குள் நுழைந்ததாக, குடிநுழைவு சட்டம் 1959/63-இன் பிரிவு 6(1)(c)-இன் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








