மலேசிய இந்திய சமூகத்தை வலுப்படுத்தும் நோக்கில், மித்ரா அமைப்பு நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மட்டும் 9.73 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் 13 திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.
இதன் கீழ், செலிக் மடானி திட்டத்தின் வழி 442 சிறார்கள் பயிலும் 22 பாலர் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் உணவுக்காக 1.07 மில்லியன் ரிங்கிட்டும், தமிழ்ப்பள்ளிகளின் தளவாடப் பொருளுதவிக்காக 1.63 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 34 தமிழ்ப்பள்ளிகளுக்குச் சிறப்புப் பயிற்சியும், 45 பள்ளிகளுக்கு விவேகப் பலகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

உயர்கல்வி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் ஆரம்ப நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதுடன், 74 இந்து ஆலயங்களுக்கு 1.48 மில்லியன் ரிங்கிட் தர்ம மடானி நிதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் அவசரகால உதவி, தொழில்முனைவோர் மற்றும் வேளாண்மை மேம்பாட்டுத் திட்டங்களும் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று ரவீந்திரன் நாயர் குறிப்பிட்டார்.
இன்று சிரம்பானில் புடாய்க்கு செரியா பாலர் பள்ளியின் ஃபாரஸ்ட் ஹைட்ஸ் மற்றும் சிரம்பான் 2 ஆகிய இரண்டு பாலர் பள்ளி கிளைகளுக்கு ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள பெற்றோர்களை சந்தித்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ரவீந்திரன் இதனை தெரிவித்தார்.

பெற்றோரின் நிதி சுமையை குறைப்பதே மித்ராவின் செலேக் மடானி திட்டத்தின் முதன்மை இலக்காகும். மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனின் தூர நோக்கு , நமது பிள்ளைகளுக்கு கல்வியைக் கொடுப்பதாகும். பிள்ளைகளுக்கு அடிப்படை கல்வியை வழங்கி, அவர்களை கரை சேர்ப்போமானால் ஒரு காலக்கட்டத்தில் வரக்கூடிய சவால்களை அவர்களால் சமாளிக்க முடியும். எனவேதான் கல்விக்கு மித்ரா முன்னுரிமை வழங்கி வருகிறது என்று ரவீந்திரன் தெரிவித்தார்.
டாக்டர் கந்தசாமி வேலாயுதன் நிர்வகித்து வரும் இந்த இரண்டு கிளை பாலர் பள்ளிகளிலும் 88 சிறார்கள் பயின்று வருகின்றனர். இவ்விரு பாலர் பள்ளிகளுக்காக 2 லட்சத்து 17 ஆயிரத்து 350 ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.









