சக பள்ளி மாணவன் ஒருவனைக் கொடூரமாகத் தாக்கிய விவகாரத்தில், 18 வயதிற்குட்பட்ட மூன்று இடைநிலைப்பள்ளி மாணவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து இவர்களது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
அம்பாங்கில் உள்ள ஸ்ரீ நீலம் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டுக்கு அடியில் நேற்று மதியம் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சந்தேக நபர்களில் ஒருவரின் காதலியை சம்பந்தப்பட்ட மாணவர் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் விவகாரமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
மாணவனை முகத்தில் அறைந்தும், உடம்பில் உதைத்தும் தாக்கியதோடு, அதனை மற்றொரு மாணவர் காணொளி எடுத்து வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் பகிர்ந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் கலகம் விளைவித்தல் மற்றும் பகடிவதை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.








