கிம்மாஸ் முதல் மெந்தகாப் வரையிலான கிழக்குக்கரை இரயில்வே தரம் உயர்த்தும் திட்டத்தின் 'பாகம் ஏ' பணிகளை வெற்றிகரமாக முடித்ததற்காக, திட்டத்தின் ஒப்பந்த நிறுவனமான 'ஆசியா கம்யூனிகேஷன் & எலக்ட்ரானிக்ஸ்' என்ற அசியாகோம் நிறுவனத்திற்கும், அதன் நிர்வாக இயக்குநர் கிஜே கிமிஸ் அவர்களுக்கும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். நேற்று பகாவ் இரயில் நிலையத்தில் நடைபெற்ற திட்ட நிறைவு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

முந்தைய ஒப்பந்ததாரரின் நிர்வாகச் சிக்கலால் பாதியில் நின்ற இத்திட்டத்தை, கடந்த 2023 நவம்பரில் மறுடெண்டர் மூலம் ஆசியாகோம் நிறுவனம் பொறுப்பேற்றது. நில ஆக்கிரமிப்புகள், மாடுகள் கடக்கும் சட்டவிரோத இரயில்வே கடவைகள் போன்ற பல்வேறு கடுமையான தரைத்தள சவால்களுக்கு மத்தியிலும், கிம்மாஸ் மற்றும் பகாவ் உள்ளிட்ட இந்த வழித்தடத்தின் 41.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டத்தை ஆசியாகோம் நிறுவனம் 100 விழுக்காடு வெற்றிகரமாக முடித்துக் காட்டியதையொட்டி, அமைச்சர் அந்தோணி லோக் இந்த பாராட்டு மழையை பொழிந்தார்.












