மலேசியத் திரைப்படத்துறையின் பழம்பெரும் நடிகரும் இயக்குனருமான மறைந்த டத்தோ நார்டின் அகமட்டின் நினைவகத்தை திறம்பட நிர்வகிக்க, தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சுடன் இணைந்து தொழில்நுட்ப வழிகாட்டல் மற்றும் ஆதரவு வழங்கப்படும் என தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள அந்த நினைவகத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஃபஹ்மி , இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் இதில் டிஜிட்டல் மற்றும் ஊடாடும் அம்சங்களை இணைக்கப் பரிந்துரைத்தார்.
அதேவேளையில், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் நெருங்குவதையொட்டி, சமூக ஊடகங்களில் பரவி வரும் சரிபார்க்கப்படாத செய்திகள் மற்றும் போலியான உள்ளடக்கங்கள் குறித்து வாக்காளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஃபஹ்மி அறிவுறுத்தினார்.
எந்தவொரு தகவலையும் அல்லது அரசியல் அறிக்கையையும் ஏற்கும் முன்பாக, பொதுமக்கள் அதனை நாட்டின் முன்னணி அதிகாரப்பூர்வ ஊடகங்களின் வாயிலாகச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








