சிரம்பான், பிப்ரவரி.24-
சுமார் 2 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பணத்தை நம்பிக்கை மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் வழக்கறிஞர் ஒருவரைச் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
ஆர். லெட்சுமயா (R Ledchumiah) என்ற அந்த முன்னாள் வழக்கறிஞர், தனது முன்னாள் கட்சிக்காரரான Maimunah Lanjung என்பவருக்குச் சேர வேண்டிய ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 592 ரிங்கிட் பணத்தை நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட ஒரு சிவில் வழக்கில் இழப்பீட்டுத் தொகையாக தனது கட்சிக்காரருக்கு வழங்கப்பட்ட அப்பணத்தை, அவர் நம்பிக்கை மோசடி செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கு நீதிபதி கமீல் நிஸாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த முன்னாள் வழக்கறிஞருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிபதி கமீல் நிஸாம் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் லெட்சுமயா தரப்பில் வழக்கறிஞர்கள் ஜி. சுப்ரமணியம் நாயர் மற்றும் தேவிகா சுப்பையா ஆகியோர் ஆஜராகினர். 2019-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த இந்த நீண்ட காலச் சட்டப் போராட்டம் இதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.








