உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கான சும்பாங்ஙான் அசாஸ் ரஹ்மா உதவித் தொகை, தகுதி பெற்ற பெறுநர்களுக்கு வரும் ஜனவரி 22 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
SARA என்று சுருங்க அழைக்கப்படும்சும்பாங்ஙான் அசாஸ் ரஹ்மா உதவித் திட்டத்தில் தலா ஒரு குடும்பத்திற்கு அல்லது தனித்து வாழும் மூத்த குடிமக்களுக்கு தலா 100 வெள்ளியும், திருமணம் ஆகாதவர்களுக்கு தலா 50 வெள்ளியும் மாதம் தோறும் வழங்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. .
குறிப்பாக, தலா ஒரு குடும்பத்திற்கு அல்லது திருமணம் ஆகாத மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டுக்கு தலா 600 வெள்ளித் தொகை, தற்போது 1,200 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில் திருமணம் ஆகாதவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டுக்கு தலா 600 வெள்ளி தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த உதவித் திட்டத்தின் மூலம் இலக்குக்கு உரிய மக்கள் பயன்பெறும் பொருட்டு 7 லட்சம் மலேசியர்களுக்காக 70 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த SARA உதவித் திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பயன்பெற்றனர். இதற்காக 13 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த உதவித் தொகை தீபகற்ப மலேசியாவில் உள்ள மக்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் வேளையில் , சபா சரவா மக்கள் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் இந்த உதவித் தொகையை பெறுவர் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.








