கிள்ளான், டிசம்பர்.10-
உலு லங்காட் பத்து 18 பகுதியில் சட்டவிரோதமாகக் காடுகள் அழிக்கப்படுவது குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யுமாறு, சிலாங்கூர் அரசாங்கம், சம்பந்தப்பட்ட துறைகளை அறிவுறுத்தவுள்ளது.
அப்பகுதியில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு, காடுகள் அழிக்கப்படுவது ஒரு காரணமா என்பது குறித்து விசாரணை செய்ய, சிலாங்கூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையும், வனத்துறையும் கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரமானது, நதி இருப்புகள் தொடர்பானதாக இருந்தால், நீர் பாசனத்துறையும், காடுகள் சம்பந்தப்பட்டதாக இருந்தால் வனத்துறையும் கையாளும் என்றும் அமிருடின் ஷாரி குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், சுங்கை லங்காட் இரண்டாம் கட்ட வெள்ளத் தணிப்புத் திட்டமானது முழுமையடையும் பட்சத்தில், அப்பகுதியில் வெள்ளப் பிரச்சினையானது தீர்க்கப்படும் என்றும் அமிருடின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








