பினாங்கு, பெர்மாத்தாங் திங்கியில் உள்ள தொழிலாளர்கள் தங்கும் விடுதியில், தனது சக நாட்டுக்காரரைக் குத்திக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் 25 வயது நேபாள பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில், அந்த தொழிற்சாலை ஊழியர் வரும் மார்ச் 29-ஆம் தேதி வரை தடுப்புக்காவவில் வைப்பதற்கு புக்கிட் மொதாஜம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
வாத்து இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 22 வயது நேபாள இளைஞர், நேற்று அதிகாலை 1.10 மணியளவில் நடந்த இந்த மோதலில் பலத்த கத்திக் குத்துக் காயங்களுடன் உயிரிழந்தார்.
தங்கும் விடுதி அறையில் சந்தேக நபருக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு உணவருந்த வெளியே சென்ற அந்த இளைஞர் , மீண்டும் விடுதிக்குத் திரும்பிய உடனே சந்தேக நபரால் விலா எலும்பில் கத்தியால் சரமாரியாகக் குத்தப்பட்டார்.
தகவலறிந்து வந்த போலீசார், விடுதியிலேயே சந்தேக நபரை கைது செய்ததோடு, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தியையும் பறிமுதல் செய்தனர்.








