கோலாலம்பூர், ஏப்ரல்.29-
கொண்டோமினியம் வீடொன்றின் 38-வது மாடியிலிருந்து, தான் பெற்றெடுத்த பெண் குழந்தையை வீசிக் கொன்ற 24 வயது இளம் பெண் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், ஒன்பதாவது மாடியின் நடைப் பாதையில் தலை நசுங்கிய நிலையில் அக்குழந்தை மீட்கப்பட்டது. விசாரணையில், குழந்தை பிறந்தவுடன் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் காரணமாகவே Lua Mei Zhu இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதிச் செய்யப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்தப் பெண் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
எனினும் அந்தப் பெண்ணின் மனநிலையைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அவரது தண்டனைக் காலம் கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து கணக்கிடப்படும் என நீதிபதி அஸ்லாம் சைனுடின் உத்தரவிட்டார்.








