2024 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியிருக்கும் இவ்வேளையில் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே தங்கள் குடும்ப உறுப்பினரான பன்னீர் செல்வம் பரந்தாமன், தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும் என்று அவரின் குடும்பத்தினர் பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
ஒரு மலேசியரான 36 வயது பன்னீர் செல்வம், சிங்கப்பூர் சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக இருந்து வருகிறார். 51.84 ஹேரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு பன்னீர் செல்வதற்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.
கடந்த பத்து ஆண்டு காலத்தில் தமது தம்பி பன்னீர் செல்வத்தின் கைகளைபிடித்து மனத்தாங்களை பகிர்ந்து கொண்டது இரண்டு முறைதான் என்கிறார் அவரின் சகோதரியான கோலாலம்பூரை சேர்ந்த சங்கரி பரந்தாமன்.
2017 ஆம் ஆண்டு தனது தம்பிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட போது அவரின் கைகளை பிடித்து ஆறுதல் கூறி, முடிந்தவற்றை அனைத்தையும் செய்கிறேன் என்று உறுதி கூறினேன்.
அடுத்தது, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாளான 2019 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி சிங்கப்பூர் அப்பீல் நீதிமன்றம் எனது தம்பி பன்னீர் செல்வத்தின் தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை தற்காலிகமாக ஒத்திவைத்த போது எனது தம்பியின் கைகளைப் பற்றியவாறு நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
என் தம்பியை காப்பாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து சட்ட அம்சங்கள் தொடர்பான நடவடிக்கைகள் முடிந்து விட்டன. இனி மேற்கொள்வதற்கு எந்த முயற்சிக்கும் சட்டத்தில் இடமில்லை. கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி பன்னீர் செல்வத்தின் கடைசி கிறிஸ்துமஸ் பண்டிகையாகும். 2024 ஆம் ஆண்டு எந்த நேரத்திலும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம்.
இந்நிலையில் கடைசி நேரத்தில் ஏதவாது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே என் தம்பி பன்னீர் செல்வத்தை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என சிறுவயதில் தனது தம்பியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது தங்கை ஏஞ்சலினாவுடன் இணைந்து பார்த்தவாறு பெர்னாமாவுடன் நினைவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளார் சங்கரி.








