கோலாலம்பூர், மார்ச்.06-
அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் போலீஸ் விசாரணைக்கு எதிராக மறைந்த முன்னாள் நிதியமைச்சர் டாயிம் ஸைனுடினின் மனைவி தோ புவான் நயிமா அப்துல் காலிட் மற்றும் இரண்டு மகன்கள் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
குற்றவியல் சட்டம் 124B பிரிவின் கீழ் நடத்தப்படும் இந்த விசாரணை சட்டவிரோதமானது என்றும் உள்நோக்கம் கொண்டது என்றும் அறிவிக்கக் கோரி அவர்கள் இந்த வழக்கு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி, நாட்டின் நிலைத்தன்மையை சீர்க் குலைக்கும் வகையிலும், அரசாங்கத்தைக் கவிழ்க்கவும் முயற்சி நடப்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் புக்கிட் அமான் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
இது குறித்து கருத்து தெரிவித்த போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில், "செல்வாக்கு மிக்க உள்ளூர் நபர் ஒருவர் சர்வதேச ஊடக நிறுவனத்துடன் இணைந்து இதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது," என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்த விசாரணை முற்றிலும் உள்நோக்கம் கொண்டது என்றும், 'சியோனிச சதி' (Zionist plot) போன்ற பொய்யான தகவல்களைப் பரப்பி பொதுமக்களைத் திசைதிருப்பும் முயற்சி என்றும் டையிம் ஸைனுடினின் மனைவி நயிமாவும், அவரது இரண்டு மகன்களும் தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் வழக்கு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.








