ஏர்ஏசியா நிறுவனத்தின் தோற்றுநரும் , மலேசியாவின் முன்னணி தொழிலதிபருமான டான் ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ், தனக்கு முதல் பேத்தி பிறந்துள்ளதைச் சமூக ஊடகங்கள் வாயிலாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
தனது பேத்திக்கு 'Olivia Rose” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக டோனி அறிவித்துள்ளார். தனது சமூக ஊடகப் பக்கத்தில், பிறந்த குழந்தையைத் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், "இந்த உலகிற்கு உன்னை வரவேற்கிறேன் ஒலிவியா ரோஸ். அம்மா மற்றும் அப்பா இருவரும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். நான் இப்போது ஒரு தாத்தா!" என்று பதிவிட்டுள்ளார்.
மலேசியாவில் 'தாத்தா' என்பதைக் குறிக்க 'டத்தோ' என்ற சொல் பயன்படுத்தப்படுவதால், டோனி பெர்னாண்டஸ் இப்போதுதான் உண்மையான 'டத்தோ' அந்தஸ்தைப் பெற்றுள்ளார் என இணையவாசிகள் வேடிக்கையாகவும் அன்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
61 வயதான டோனி பெர்னாண்டஸுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். 2021-ஆம் ஆண்டுதான் அவருக்கு மூன்றாவதாக அலியா எனா என்ற மகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அவரது ரசிகர்கள் மற்றும் சக தொழிலதிபர்கள் எனப் பலரும் டோனி பெர்னாண்டஸுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.








