கூட்டரசு அரசால் அறிவிக்கப்பட்ட 1.5 பில்லியன் ரிங்கிட் இடைக்கால சிறப்பு மானியத்தில், கடந்த ஜூன் 12-ஆம் தேதி 600 மில்லியன் ரிங்கிட் மட்டுமே சபா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 900 மில்லியன் ரிங்கிட்டையும் இந்த ஆண்டுக்குள் வழங்க வேண்டும் என சபா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சபா மாநில உதவி நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது இஷாக் அயூப் இதனை மாநில சட்டமன்றத்தில் கேள்வி பதில் நேரத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கூட்டரசு மற்றும் சபா அரசாங்கதிற்கு இடையே கடந்த ஜூன் 9, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பல கட்ட கடிதப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 1.5 பில்லியன் ரிங்கிட் சிறப்பு மானியத்தை சபா அரசாங்கம் இடைக்கால ஏற்பாடாக மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளது என்றும், இதனை இறுதி மானியத் தொகையாக ஏற்றுக்கொண்டதாக கருதக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், கூட்டரசு அரசியலமைப்பின் 112C மற்றும் 112D பிரிவுகளின் கீழ், சபா மாநிலத்திற்கான உரிமைகள் பாதிக்கப்படாமல் தொடரும் என்றும் முகமது இஷாக் தெரிவித்துள்ளார்.
மேலும், சபாவுக்கு வழங்கப்பட வேண்டிய 40 சதவீத வருவாய் பகிர்வின் அடிப்படையில் இறுதி மானியத் தொகையை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதி மானியத் தொகை குறித்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், கூட்டரசு அரசியலமைப்பின் 112D(6) பிரிவின்படி சுயாதீன மதிப்பீட்டாளரை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








