ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.06-
பினாங்கு, ஜாலான் ரெசிடென்சியில் உள்ள பினாங்கு மருத்துவமனை கட்டுமானத் தளத்தில், சிமெண்ட் லாரி ஒன்று சுமார் இரண்டு மாடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் இந்தோனேசிய நபர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று வெள்ளிக்கிழமை காலை 11:29 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. சிமெண்ட் லாரி நிலைதடுமாறி கட்டுமானப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்ததாக நம்பப்படுகிறது.
தகவலறிந்த ஜாலான் பேராக் மற்றும் லெபோ பந்தாய் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்ட அந்த நபரை, அங்கிருந்த ஒரு கிரேன் உதவியுடன் மதியம் 12.55 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
விபத்தில் சிக்கிய நபர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். உயிரிழந்தவரின் உடல் மேல் நடவடிக்கைக்காகக் போலீஸ் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மதியம் 1.16 மணியளவில் மீட்பு நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்தன.








