ஈப்போ, நவ.11-
ஈப்போவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் ஹேரோயின், கஞ்சா வகையைச் சேர்ந்த 2 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான மதிப்புகொண்ட போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி மாலை 6 மணியளவில் ஈப்போ, ஜாலான் செயிண்ட் ஜோன் என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 41 வயது மதிக்கத்தக்க ஆடவரை போலீசார் கைது செய்ததாக பேரா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் ஸுல்காப்லி சரியாட் தெரிவித்தார்.
இச்சோதனை நடவடிக்கையில் 42 பேக்கெட் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை ஜாலான் பங்லீமா புக்கிட் கந்தாங் வஹாப்பில் 33 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதுடன், அடுத்த ஒரு மணி நேரத்தில் ஈப்போ, தாமான் மாஸில் 45 வயதுடைய மேலும் ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பிடிபட்ட மூன்று நபர்களில் இருவர், குற்றவியல் பதிவுகளை கொண்டு இருப்பதாக இன்று ஈப்போவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஸுல்காப்லி சரியாட் இதனை தெரிவித்தார்.








