குவாந்தான் தாமான் பாண்டான் டாமாயில் உள்ள நகைக்கடையில், ஆயுதம் ஏந்திய நான்கு முகமூடி கொள்ளையர்கள் சுமார் 5 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் பாராங் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்த 5 நிமிடங்களிலே நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஷாரி அபு சமா தெரிவித்தார்.
அப்போது கடையில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. கடை உரிமையாளரின் மனைவி மற்றும் இரண்டு பெண் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி மற்றும் வாகனங்களின் டாஷ்கேம் பதிவுகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.








