வெளிநாட்டு விவகாரங்களில் பாஸ் கட்சி குரல் எழுப்பி வரும் நிலையில், முஸ்லிம்களின் நலனுடன் தொடர்புடைய உள்நாட்டு விவகாரமான தபோங் ஹாஜி ஆர்.சி.ஐ அறிக்கை குறித்து மௌனம் காப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் குற்றம்சாட்டியுள்ளார்.
2014 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தபோங் ஹாஜி வாரியத்தின் கணக்கு மற்றும் முதலீட்டு நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் திறமையின்மை குறித்து அரச விசாரணை ஆணையமான ஆர்.சி.ஐ அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
இதில் மில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்புகளும் இடம்பெற்றுள்ளதாக ஃபஹ்மி தெரிவித்தார்.
தொலைதூர வெளிநாட்டு விவகாரங்கள் குறித்து பல கருத்துகளை வெளியிடும் பாஸ் கட்சி, தபோங் ஹாஜி போன்ற முக்கியமான உள்நாட்டு விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தபோங் ஹாஜி நிறுவனத்தை அதன் உரிய நிலைக்கு மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருவதாக ஃபஹ்மி தெரிவித்தார்.








