ஷா ஆலாம், ஏப்ரல்.05-
கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜா பகுதியில் உள்ள ஒரு பாதுகாப்புச் சாவடியில் இன்று அதிகாலை நிகழ்ந்த மோதலில் உள்ளூர் பாதுகாவலர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில், மர்ம நபர் ஒருவர் தாக்கியதில் படுகாயமடைந்த அந்த அதிகாரி, ஷா ஆலாம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அதிகாலை 4:18 மணியளவில் உயிரிழந்ததாக கிளாங் உத்தாரா மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்டக் கருத்து வேறுபாடே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்படையினர், 40 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரைக் கைது செய்ததோடு தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புத் தடியையும் பறிமுதல் செய்துள்ளனர்.








