நெடுஞ்சாலையில் பல உயிர்களைச் சுமந்து செல்லும் பேருந்தை ஓட்டும்போது, ஒரு பெண்ணைத் தனது மடியில் அமர வைத்து 'ஜாலியாகச் சவாரி செய்த' ஓட்டுநரை ஸ்ரீ மாஜு குரூப் நிறுவனம் உடனடியாகப் பணி நீக்கம் செய்தது.
நேற்று கோலாலம்பூர் TBS முனையத்திலிருந்து ஜோகூர் பாரு Larkin முனையத்திற்குச் சென்ற பேருந்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் வைரலான 9 வினாடி வீடியோவில், பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போதே ஓட்டுநரின் மடியில் ஒரு பெண் அமர்ந்திருப்பதும், அவர் ஸ்டீயரிங்கை இயக்குவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
இந்தச் செயல் தொழில்முறை நெறிமுறைகளுக்கு எதிரானது மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என ஸ்ரீ மாஜு குரூப் கண்டனம் தெரிவித்துள்ளது. ஓட்டுநரை உடனடியாகப் பணிநீக்கம் செய்துள்ள நிறுவனம், இது குறித்துப் போலீஸில் புகார் அளித்துள்ளதோடு தரைப் பொதுப் போக்குவரத்து ஏஜென்சிக்கு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இச்சம்பவத்திற்குப் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொண்ட நிறுவனம், இனிவரும் காலங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சாலைப் போக்குவரத்து இலாகாவான JPJ அந்த ஓட்டுநருக்கு அழைப்பாணை விடுத்துள்ளதுடன், விரிவான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.








