ஜோகூர், இஸ்கண்டார் புத்தேரி-யில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தன் வசம் 63.4 கிலோ எடைகொண்ட போதைப்பொருளை வைத்திருந்ததாக ஆடவர் ஒருவர் ஜோகூர் பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
28 வயது டி.கௌசிகன் என்ற அந்த ஆடவர், மாஜிஸ்திரேட் ஏ. ஷார்மினி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
அந்த நபர் கடந்த ஜுன் 8 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் இஸ்கண்டார் புத்தேரி, ஹொரைசன் ஹில்ஸ், ஜாலான் பெர்சியாரன் தெங்கா என்ற இடத்தில் சாலையோரத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது ஆயுத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் டி.கௌசிகன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








