கல்வியே எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடு என்ற அடிப்படையில், மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா, 2026ஆம் ஆண்டிற்க்கான ‘செலிக் மடானி’ தொடக்கக் கல்வி மானியத் திட்டத்தின் மூலம் பீ40 குடும்பங்களைச் சேர்ந்த இந்தியச் சிறார்களுக்கு தரமான கல்வி வாய்ப்புகளை வழங்கி வருகின்றது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், சிறார்களின் அறிவு, போட்டித்திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மலேசிய இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக சிறார்களின் திறன்களை சிறு வயது முதலே வளர்ப்பது அவசியம் என மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர் தெரிவித்தார். மேலும், திட்டத்தின் நிதி நேரடியாக பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்ய, ‘செலிக் மடானி’ திட்டம் வெளிப்படையாகக் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
2026-ஆம் ஆண்டில் நாடு முழுவதும், 162 பாலர்பள்ளிகளில் பயிலும் 3,612 இந்தியச் சிறார்களுக்கு ஆதரவளிக்க மித்ரா மொத்தம் 8.87 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு மாணவரும் கல்வி மானியம் மற்றும் காலை உணவு உதவித்தொகை உட்பட ஆண்டிற்க்கு 2,530 ரிங்கிட் வரை நிதியுதவி பெறுவார்.
இதன் மூலம் பீ40 குடும்பங்களின் நிதிச்சுமை குறைவதுடன், சிறார்களுக்கு சிறந்த தொடக்கக் கல்விச் சூழல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கால தலைமுறையை வலுப்படுத்தும் வகையில் திறன் மேம்பாடு, தொழில்முனைவு, சமூக நலன், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஒருமைப்பாடு உள்ளிட்ட துறைகளிலும் மித்ரா தொடர்ந்து செயல்படும் என ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.









