மலேசியா மற்றும் ஈரான் இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை கொண்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் காலித் நோர்டின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈரான் நாட்டின் தற்காப்பு அமைச்சர் சயீத் மஜித் எப்னே-ரெஸா உடன் நேற்று தொலைபேசியில் கலந்துரையாடியதாக காலித் நோர்டின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போரின் போது மோதலை எதிர்கொண்ட விதத்தில், தனது தற்காப்புத் திறன்களின் உறுதியை ஈரான் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவை அடிப்படையாகக் கொண்டு, தற்காப்புத் துறையில் மேலும் வலுவான ஒத்துழைப்புக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த காலித் , அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லங்காவி அனைத்துலக கடல்சார் மற்றும் விண்வெளி கண்காட்சியான லிமா-வில் ஈரான் பங்கேற்பதையும் வரவேற்றார்.
அதேவேளையில், இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான தற்காப்பு ஒத்துழைப்பை ஆராய்வதற்கான முக்கிய தளமாக லிமா அமையும் என்றும் காலித் தெரிவித்துள்ளார்.








