ஷா ஆலாம், நவ. 11-
இரண்டு ஆண்டு 11 மாத அகவையைக்கொண்ட சிறுவனான எம். ராஜமித்ரன், ஒரே நிமிடத்தில் 57 வகையான கார்களின் சின்னங்களின் பெயர்களைக் கூறி, மலேசிய சாதனைப்புத்தகத்தில் இடம் பெற்று, பலரின் அபரிமித பாராட்டுக்களை பெற்றுள்ளான்..
கார்களின் சின்னங்களை அதிகமாக ஞாபகத்தில் வைத்திருக்கக்கூடிய சிறார்களுக்கான போட்டியில் தமது மகன் ராஜமித்ரன் இந்த சாதனையைப் படைத்துள்ளதாக அவனின் தாயார் 33 வயது சி. சாரண்யா தெரிவித்தார்.
தங்களின் ஒரே மகனான ராஜமித்ரன், ஒரு வயது முதல் கார்களின் சின்னங்கள் மீது அலாதிப்பிரியம் கொண்டவனாக இருந்து வந்துள்ளான் என்று சாரண்யா குறிப்பிட்டார்.

முதல் முறையாக சாலையில் வோல்ஸ்வேகன் ரக காரைப் பார்த்தப் பின்னர் இந்த ஞாபகசத்தியும், கார்கள் மீது அவன் கொண்டுள்ள பிரியமும் தானாக வளர்த்ததாக சாரண்யா தெரிவித்தார்.
தொடக்கத்தில் தமது கணவன், எஸ்.எம். முகியலன், ஐந்து வாகனங்களின் பெயர்களை கூறும், முறையை சொல்லிக்கொடுத்ததாகவும், அடுத்த நாள் அந்த ஐந்து கார்களின் பெயர்களை தமது மகன் மனப்பாடாக ஒப்பிவித்த போது, அவனின் அபார ஞாபக சக்தி திறனை தங்களால் உணர முடிந்ததாக குறிப்பிட்டார்.
அதேவேளையில் இரண்டு மாதத்தில் 70 கார்களின் பெயர்களை கூறும் அளவிற்கு அவனது தனித்துவமான திறன் வளர்ந்ததாக பேரா, ஈப்போவைச் சேர்ந்த சாரண்யா தெரிவித்தார்.








