கோலாலம்பூர், ஆகஸ்ட்.14-
கோலாலம்பூர் ஜாலான் பார்லிமென்டில் நேற்று நடந்த மறியலின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பைச் சித்தரிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து காவல் துறையினர் அது குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஆட்சேப மனுவைச் சமர்ப்பிக்கும் போது சட்ட ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சட்ட அமலாக்கப் பணியாளர்களுக்குச் சினமூட்டக்கூடிய மற்றும் அவர்களைத் தாக்கும் சம்பவங்களை அந்த டிக் டாக் காட்சிகள் சித்தரிப்பதாக கோலாலம்பூர் போலீஸ் டத்தோ ஃபாடில் மார்சுஸ் கூறினார்.
இந்த மோதலின் விளைவாக ஓர் போலீஸ் அதிகாரி காயமடைந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
ஓர் அரசு ஊழியரைக் கடமைகளைச் செய்வதைத் தடுக்க குற்றவியல் பலாத்காரத்தைப் பயன்படுத்தியதற்காகவும் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் வகையில் கீழறுப்பு செய்ததற்காகவும் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அமைதியாக ஒன்று கூட அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையைக் காவல்துறை நிலை நிறுத்தும் என்று ஃபாடில் மீண்டும் வலியுறுத்தினார்.
அதே சமயம், அமைதியின்மையைத் தூண்டும் அல்லது அதிகப்படியானச் சினமூட்டும் செயலில் ஈடுபடும் தரப்பினருக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.








