கோலாலம்பூர், டிசம்பர்.04-
கடந்த மாதம் நவம்பர் மலாக்கா, டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் ராஜேஸ் நாகராஜன் இன்று வலியுறுத்தியுள்ளார்.
அந்த மூன்று இந்திய இளைஞர்களையும் போலீசார் சுட்டுக் கொல்வதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதற்கான ஆதாரங்களைத் தாங்கள் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது முழுக்க முழுக்க மரணத் தண்டனை நிறைவேற்றும் தன்மையில் அமைந்த கொலையாகும் என்பதற்கு தங்கள் வசம் உள்ள ஆடியோ விவரிக்கிறது என்று ராஜேஸ் தெரிவித்தார்.
எனவே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள போலீஸ்கார்கள் மீது குற்றவியல் சட்டம் 302 பாய வேண்டும் என்று ராஜேஸ் வலியுறுத்தினார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 21 வயது எம். புஷ்பநாதன், 24 வயது T. புவனேஸ்வரன் மற்றும் 29 வயது ஜி. லோகேஸ்வரன் ஆகியோர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்த மூவரும் பாராங்கினால் போலீசாரைத் தாக்க வந்ததால் அவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என்று மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் தெரிவித்து இருந்தார்.








