சிலாங்கூர், தாமான் கின்ராராவில் உள்ள சமூக ஆர்வலர் எஸ். சந்திரசேகரனின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பெண் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடந்த இச்சம்பவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவை அதிருப்தி மற்றும் மனவருத்தம் காரணமாக நடந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி காஹார் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, 12 பேரில், 7 பேர் சம்பவத்துடன் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு உதவுவதற்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மற்ற ஐந்து பேர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.








