கோலாலம்பூர், மார்ச்.15-
மக்கள் தங்கள் வீடுகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பது, அரசாங்கத்திடம் உணவுப் பாதுகாப்புத் திட்டம் இல்லை என்பதைக் குறிக்காது என்று வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமது சாபு தெரிவித்துள்ளார். சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகள் வலுவான உணவுக் கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், தற்சார்பு பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக நகர்ப்புற விவசாயத்தை முன்னெடுப்பதை அவர் சுட்டிக் காட்டினார். உலகளாவிய புவிசார் அரசியல் மோதல்களால் உர விலை உயர்வு, விநியோகச் சங்கிலி பாதிப்பு போன்ற சவால்கள் எழுந்துள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க ஒன்பது நீண்டகால வியூகங்களை அமைச்சு செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, அரிசி கையிருப்பை அதிகரித்தல், பெட்ரோனாஸ் நிறுவனத்துடன் இணைந்து விவசாய இடுபொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துதல் போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.








