சபா மாநில துவாரன் பகுதியில், நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 700 பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தீயில் கருகி அழிந்தன.
இச்சம்பவமானது ஜாலான் துங்குன் மாராபஹாய் தம்பலாங் 2 பகுதியில் உள்ள சுமார் 0.8 ஹெக்டேர் பரப்பளவுள்ள வாகன சேமிப்பு கிடங்கில் ஏற்பட்டதாக சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
அந்த வளாகம் ஓர் உள்ளூர் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், அதன் அருகிலிருந்த காட்டுப்பகுதியிலிருந்து காட்டுத்தீ பரவி இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று பிற்பகல் 1.10 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாகவும், அடுத்த 8 நிமிடங்களில் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்தை சென்றடைந்ததாகவும் சபா தீயணைப்புத் துறை அறிவித்துள்ளது.
மதியம் 3.31 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்த வீரர்கள், 30 வாகனங்களை மீட்டுள்ளனர்.
இவ்விபத்தில் உயிர்சேதம் எதுவும் இல்லை என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.








