May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தூக்கு மேடையிலிருந்து பன்னீர் செல்வத்தைக் காப்பாற்ற, ஆசியானின் தலைவர் என்ற அந்தஸ்தைப் பயன்படுத்துவீர் மலேசியாவிற்கு ALIRAN அமைப்பு கோரிக்கை

Share:

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக ஒரு மலேசியரான பன்னீர் செல்வம் பரந்தாமன், நாளை பிப்ரவரி 20 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலையில் சிங்கப்பூர், சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்படுவது உறுதியாகியுள்ளது.

இன்னும் 17 மணி நேரமே எஞ்சியிருக்கும் வேளையில் 30 வயது மதிக்கத்தக்க பன்னீர் செல்வத்தை தூக்கு மேடையிலிருந்து காப்பாற்ற, மலேசியா, தனது ஆசியான் தலைவர் அந்தஸ்தை பயன்படுத்த வேண்டும் என்று தேசிய விழிப்புணர்வு இயக்கமான ALIRAN கோரிக்கை விடுத்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா, பன்னீர் செல்வத்தின் தூக்குத் தண்டனையைச் சிறைத் தண்டனையாக மாற்றும்படி தென்கிழக்காசிய கூட்டமைப்பின் ஓர் உறுப்பு நாடான சிங்கப்பூருக்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று Aliran கேட்டுக்கொண்டது.

பரஸ்பர உறவு, இருவழி ஒத்துழைப்பு, கருத்திணக்க ஒப்பந்தம் என்று அதிகமாகப் பேசும் நாம், விலை மதிக்க முடியாத ஓர் உயிருக்காக, அந்த நட்புறவை பயன்படுத்தி, மனித நேய அடிப்படையில் ஒருவரின் தூக்குத் தண்டனையை சிறைத் தண்டனையாக மாற்றுவதற்கு கோரிக்கை விடுப்பதில் தவறியில்லை.

பன்னீர் செல்வத்தின் தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்யக்கோரி, மலேசியா, ஆசியான் தலைவர் அந்தஸ்தை பயன்படுத்துவதுடன், தனது அரச தந்திர உறவையும் பயன்படுத்த வேண்டும் என்று Aliran இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

மலேசியாவில் தூக்குத் தண்டனை அகற்றப்பட்ட நிலையில், ஒவ்வோர் உயிரும், இரண்டாவது வாய்ப்பைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளது.

அந்த வகையில் பன்னீர் செல்வத்தின் உயிருக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சிங்கப்பூரை கேட்டுக்கொள்வதில் மலேசியா உடனடியாக தலையிட வேண்டும் என்று Aliran வலியுறுத்தியுள்ளது.

Related News

தூக்கு மேடையிலிருந்து பன்னீர் செல்வத்தைக் காப்பாற்ற, ஆசிய... | Thisaigal News