ஜப்பான், ஒசாகாவில் உள்ள தென்னோஜி மிருகக்காட்சிசாலையில், மலேசியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட 'அமோய்' (Amoi) என்ற ஆசிய யானை வைக்கோல் வலையைக் கடிக்கும் வைரல் வீடியோ, அதன் மன அழுத்தம் அல்லது பசியின் அடையாளம் அல்ல என்று தைப்பிங் நகராண்மைக்கழகத்தின் தலைவர் முஹமட் அக்மால் டஹலான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், காடுகளில் யானைகள் இயற்கையாக உணவு தேடும் முறையைத் தூண்டுவதற்காக உலகளவில் பயன்படுத்தப்படும் ஒரு தற்காப்பு வழிமுறைதான் இந்த வைக்கோல் வலைகள் என்று விளக்கினார். இது யானைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அவற்றின் சலிப்பைக் குறைக்கும் என அவர் கூறினார்.
மலேசியாவின் தாரா, அமோய் மற்றும் கெலாட் ஆகிய மூன்று யானைகளும் நல்ல ஆரோக்கியத்துடனும், தீவிர கண்காணிப்பிலும் உள்ளன. ஜப்பானின் தற்போதைய கடுமையான கோடைகால வெப்பத்தைத் தாங்கும் வகையில் அவற்றுக்குக் குளியல் குளங்கள், நிழல் குடில்கள் மற்றும் சேற்று சகதிகள் போன்ற சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, முழுமையான பின்னணியை அறியாமல் குறுகிய வீடியோக்களை மட்டும் பார்த்து பொதுமக்கள் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என முஹமட் அக்மால் டஹலான் கேட்டுக் கொண்டார்.








