கோலாலம்பூரில் உள்ள பானாசோனிக் (Panasonic) தொலைக்காட்சி உற்பத்தித் தொழிற்சாலை மூடப்படுவதால் பாதிக்கப்படும் தொழிலாளர்களை, சிலாங்கூர் மாநில அரசு அடுத்த வாரம் நேரில் சந்தித்து மாற்று வேலை வாய்ப்புகள் மற்றும் இதர உதவிகள் குறித்து விவாதிக்கவுள்ளது.
இன்று நடைபெற்ற சிலாங்கூர் மெகா ஜோப்கேர் 2026 வேலை வாய்ப்பு துவக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநில மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு மற்றும் 'பெர்கேசோ' (Perkeso) அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று தெரிவித்தார்.
பாதிக்கப்படும் 400 தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதோடு, மாற்று வேலைகளைக் கண்டறியவும் அரசு உதவும் என்று அவர் உறுதியளித்தார். இதற்கிடையே, வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு 'பெர்கேசோ' நிறுவனம் மூலம் முதல் மாதச் சம்பளத்தில் 80 விழுக்காடு தொடங்கி, அடுத்தடுத்த மாதங்களில் முறையே 50 மற்றும் 30 விழுக்காடு எனப் படிப்படியாக வேலை தேடும் உதவித்தொகை காப்புறுதி முறையில் வழங்கப்படும் என்று பாப்பாராயுடு விளக்கமளித்தார்.








