துன் விருதை பெற்றவர்கள் அனைவரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, முதலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று எஸ்பிஆர்எம்-மிற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
துன் பட்டத்தை சுமந்து நிற்பவர்கள்,தவறான வழியில் அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனக்கும், தனது குடும்பத்திற்கும் சொத்துக்களை குவித்துக் கொண்டு இருப்பது ஆதாரங்களுடன் தெரியவந்தால் அந்த சொத்துக்கள் அனைத்தையும் எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்ய வேண்டும் என்று துன் மகாதீர் ஆலோசனை கூறியுள்ளார்.
துன் பட்டத்தை சுமத்திருப்பவர்கள் அனைவரையும் விசாரணை செய்யப்படுவதற்கு முன்னதாக, ஒரு முன்னுதாரண தலைவராக துன் மகாதீர் முகமது முதலில் விசாரணை செய்யப்பட வேண்டும். துன் மகாதீருக்கும் அவரின் பிள்ளைகளுக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் எவ்வாறு குவிக்கப்பட்டுள்ளன என்பதை கண்டறியவும், அவை குறித்து விளக்கம் அளிக்கவும் துன் மகாதீர் முதலில் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷம்சுல் இஸ்கன்டார் முஹமாட் அகின் கேட்டுக்கொண்டார்.
துன் மகாதீர் நாட்டின் பிரதமராக இருந்த போது மிகப்பெரிய நிதி முறைகேட்டிற்கு வித்திட்டு, பல கோடி வெள்ளி அரசாங்கப் பணத்திற்கு இழப்பை ஏற்படுத்திய திரெங்கானுவை தளமாக கொண்ட Perwaja Steel Sdn. Bhd எஃகு உற்பத்தி தொழிற்சாலையில் துன் மகாதீரின் நெருங்கிய நண்பரான Eric Chia சம்பந்தப்பட்ட 570 கோடி வெள்ளி இழப்பு குறித்து முதலில் விசாரிக்கப்பட வேண்டும்.
சரவாக்கில் நிர்மாணிக்கப்பட்ட மிகப்பெரிய நீர் மின்சாரத் திட்டமான 180 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட Bakun Hidro elektrik பெருந்திட்டம், மலேசிய அனைத்துலக கப்பல் போக்குவரத்து நிறுவனமான MISC Berhad, PKFC, Maminco, துன் மகாதீரின் பிள்ளைகள் சம்பந்தப்பட்ட கென்சானா பெட்ரோலியம் Petroleum முதலிய திட்டங்கள் குறித்து எஸ்பிஆர்எம் விசாரணை செய்ய வேண்டும் என்று ஷம்சுல் இஸ்கன்டார் கேட்டுக்கொண்டார்.








