கடந்த ஜூன் 24 அன்று ரொம்பினில் நிகழ்ந்த ஒரு பயங்கரச் சாலை விபத்தில், லாடாங் பத்தாங் ஜெலாயைச் சேர்ந்த விசு என்பவரின் மைத்துனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; அவரது மகன் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் அழைப்பை ஏற்று அவர்களை நேரில் சந்தித்த நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பனின் சிறப்பு அதிகாரி திரு. முரளி தங்கையா, இந்த விபத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் முதலில் மோதியவுடன், அதிலிருந்து சிலர் கீழே இறங்கியுள்ளனர். ஆனால், அதன் பிறகு அந்த வாகனம் மீண்டும் பின்னோக்கி வந்து, கீழே விழுந்து கிடந்த பாதிக்கப்பட்டவர் மீது வேண்டுமென்றே இரண்டாவது முறையாக மோதித் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகக் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர் என்ற முரளி விவரித்தார்.
இந்த விபத்தில் காயமுற்ற விசுவின் மைத்துனரின் மகன் அளித்த தகவலின்படி இந்த சம்பவத்தில் கடுமையான குற்றவியல் அம்சங்கள் இருப்பதாகக் குடும்பத்தினர் சந்தேகிக்கப்பட்டு புகாரளித்துள்ளனர். எனவே போலீஸ் துறையின் போக்குவரத்துப் பிரிவும், ஜெம்புல் மாவட்ட போலீஸ் தலைமையகமும் இது குறித்து மிகத் தீவிரமான, வெளிப்படையான விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என முரளி தங்கையா கேட்டுக்கொண்டுள்ளார்.
சாதாரண விபத்தாக கடந்து போகாமல், இதில் குற்றவியல் சதி இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அதேவேளையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க ஆவனம் செய்யப்பட வேண்டும் என்று அரச மலேசிய போலீஸ் படையினரை முரளி கேட்டுக்கொண்டுள்ளார்.













