சிலாங்கூர், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமையில் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதிக்கான சதுரங்கப் போட்டி 2026, நேற்று புக்கிட் ரிமாவிலுள்ள ஆஸ்டர் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கோத்தா கெமுனிங் மக்கள் சேவை மையமும், சேலஞ்சர் செஸ் அகாடமி- யும் இணைந்து ஏற்பாடு செய்த இப்போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான பெற்றோர்களும் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு உற்சாகமளித்தனர்.
இந்நிகழ்வில் பேசிய கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகள் மின்னணு சாதனங்களில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்த்து, சிந்தனைத் திறனை வளர்க்கும் பயனுள்ள பொழுதுபோக்குகளில் ஈடுபட வேண்டும் என்றார்.
சதுரங்கம் குழந்தைகளின் விமர்சன சிந்தனை, பொறுமை, கவனம், உத்தி வகுக்கும் திறன் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றலை மேம்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், இத்தகைய நிகழ்வுகள் மூலம் சிறுவர்களின் திறமைகளை வளர்ப்பதுடன், பெற்றோர், பிள்ளைகள் மற்றும் சமூகத்தினரிடையே நல்லுறவையும் வலுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
சதுரங்கத் துறைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் சங்க நிர்வாகிகள் மற்றும் ஒத்துழைப்பாளர்களுக்கும் பிரகாஷ் சம்புநாதன் நன்றி தெரிவித்தார்.








