மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, எந்தவொரு அரசியல் கூட்டணியுடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயாராக இருப்பதாக அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
பாரிசான் நேஷனல் மலாக்கா தலைவர் அப்துல் ரவூப் யூசோவுக்கு, எந்தக் கூட்டணியுடனும் பேச்சுவார்த்தை நடத்த தாம் அதிகாரம் வழங்கியுள்ளதாக ஜாஹிட் கூறினார்.
அரசியல் பேச்சுவார்த்தைகளில் தொகுதிப் பங்கீடு சவாலான விஷயமாக இருந்தாலும், முறையான பேச்சுவார்த்தை மூலம் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்றார்.
பேச்சுவார்த்தையில் எட்டப்படும் எந்த முடிவும் உயர்மட்டத் தலைமைக்கும், பின்னர் பாரிசான் நேஷனல் உச்ச மன்றத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மலாக்கா தேர்தலில், கடந்த தேர்தலில் வென்ற 21 தொகுதிகளையும் பாரிசான் நேஷனல் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறது.
இதனிடையே, பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்னும் முட்டுக்கட்டை நீடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








