மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் மரணத்துக்குக் காரணமாக ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட சிங்கப்பூரில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்த 25 வயது டி. யுக்கன் என்பவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று விதித்தது.
கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி அதிகாலை சுமார் 4.20 மணியளவில், கெலாங் பாத்தா, ஜாலான் லியோங் பீ- சாலையில் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியதில், 41 வயது முஹம்மத் ஈசா தாமிரி என்பவர் உயிரிழந்தார்.
தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை யுகேன், செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், அவர் 5 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் பெறவோ வைத்திருக்கவோ தடை விதிக்கப்படுவதாக மாஜிஸ்திரேட் நூர் பாத்தின் முகமது பரித்தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
தனது தவறுக்கு வருந்துவதாகக் கூறி தண்டனையை குறைக்கும்படி தனது கருணை மனுவில் யுகேன் கேட்டுக்கொண்டார். எனினும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரசு தரப்பு வலியுறுத்தியது.








