பினாங்கு தீவில், தானியங்கி வாகனப் பதிவு எண் அடையாளம் காணும் ஏ.என்.பி.ஆர் முறையில், குறிக்கப்பட்ட பார்க்கிங் இடங்களுக்கு வெளியே வாகனங்களை நிறுத்தியதாக விதிக்கப்பட்ட அனைத்து அபராதங்களும் ரத்து செய்யப்படுவதாக பினாங்கு ஊராட்சித்துறை விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் ஹங் மூய் லாய் தெரிவித்துள்ளார்.
பயணிகளை ஏற்ற அல்லது இறக்குவதற்காக வாகனங்கள் சிறிது நேரம் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்தாலும், அதை ஏ.என்.பி.ஆர் முறையால் கண்டறிய முடியாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஏற்கனவே இந்த அபராதங்களைச் செலுத்தியவர்கள், வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் எம்.பீ.பி.பி அல்லது எம்.பீ.எஸ்.பி மூலம் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கு அபராதம் செலுத்திய ரசீது மற்றும் வங்கிக் கணக்கு அறிக்கையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
இனி, குறிக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள், உள்ளாட்சி அதிகாரிகளால் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும்.
எனினும், பார்க்கிங் அல்லது வாகன நிறுத்தம் முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு இந்த விலக்கு பொருந்தாது என்பதையும் அவர் விளக்கினார்.








