கோலாலம்பூர், பிப்ரவரி.10-
உயர்க்கல்விக்கான தேசிய நிதியகமான பிடிபிடிஎன்னின் பயணக் கட்டுப்பாடானது, கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வசதியிருந்தும் கூட, அதனைச் செலுத்தாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடனைத் திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் மீது இந்த பயணக் கட்டுப்பாடானது விதிக்கப்படவுள்ளது.
அதே வேளையில், படிப்பை முடித்து இன்னும் வேலை கிடைக்காதவர்களும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களைப் பெற்று வருபவர்களுக்கும் இந்த நடவடிக்கையானது பொருந்தாது என்று உயர்க்கல்வி துணையமைச்சர் அடாம் அட்லி அப்துல் ஹாலிம் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
மேலும், பட்டப்படிப்பை முடித்தப் பிறகு, கடனைத் திருப்பிச் செலுத்த 12 மாத கால அவகாசம் உள்ளிட்ட பல திட்டங்களையும் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திட்டமிட்டபடி பணம் செலுத்த முடியாதவர்கள், 60 வயது வரை தங்கள் கடன் திருப்பிச் செலுத்தும் முறையை மறுசீரமைப்பு செய்து கொள்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுவரை, 4.26 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு உதவுவதற்காக சுமார் 77.5 பில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அடாம் அட்லி குறிப்பிட்டார்.








