ஈப்போ, ஜனவரி.16-
"புலி இருக்கிறது, கவனமாக இருங்கள், சீக்கிரம் காரில் ஏறுங்கள்" - சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நிமிட வீடியோவில் பதிவாகியுள்ள இந்த எச்சரிக்கை குரல்கள், மலாயா புலியை நேருக்கு நேர் சந்தித்த போது நிலவிய பயங்கரமான சூழலை வெளிப்படுத்துகின்றன.
கடந்த ஜனவரி 11-ஆம் தேதி காலை 10.30 மணியளவில், செமோர் (Chemor), புக்கிட் கிண்டி பகுதியில் உள்ள ஒரு டுரியன் தோட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, பேராக் மாநில மலாயா புலி பாதுகாப்பு பிரிவின் குழுவினரான UKHM பொறுப்பாளர்கள் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, புலி ஒன்று இவர்களை நோக்கி முன்னேறி வந்துள்ளது. குழுவினர் கம்புகளை வைத்தும், சத்தம் எழுப்பியும் புலியை விரட்ட முயன்றனர். ஆனால், புலி சற்றும் அஞ்சாமல் அவர்களை நோக்கி நெருங்கி வந்துள்ளது.
புலி மிக அருகில் வந்ததைக் கண்ட அதிகாரிகள், "புலி... புலி... சீக்கிரம் காரில் ஏறுங்கள்!" என ஒருவருக்கொருவர் எச்சரித்துக் கொண்டு, அருகில் நின்றிருந்த டொயோட்டா ஹிலக்ஸ் (Toyota Hilux) வாகனத்தை நோக்கி ஓடினர்.
அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரையும், வாகனத்தை விட்டு விட்டு உடனே காருக்குள் ஏறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அனைவரும் பாதுகாப்பாக வாகனத்திற்குள் ஏறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த வைரல் வீடியோவில் காணப்பட்ட அதே புலி, பின்னர் புக்கிட் கிண்டி பகுதியில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை வைத்த பொறியில் சிக்கியது. சுமார் 2 வயது மதிக்கத்தக்க, 75 கிலோ எடை கொண்ட அந்தப் புலி தற்போது ஆரோக்கியமாக உள்ளது. மேல் நடவடிக்கைக்காக அது சுங்காய் தேசிய வனவிலங்கு மீட்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஆபத்தான சூழலிலும் அமைதியாகவும் துரிதமாகவும் செயல்பட்டு உயிர்களைக் காப்பாற்றிய UKHM குழுவினரின் செயலை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.








