ஜாசின், டிச.9-
குழந்தை பராமரிப்பாளர் இல்லத்தில் எறும்புக்கடித்து இருக்கலாம் என்று நம்பப்படும் ஆறு மாத ஆண் குழந்தை ஒன்று, மூச்சடைத்து, உயிரிழந்தது.
இச்சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் மலாக்கா, ஜாசின், மெர்லிமாவில் நிகழ்ந்தது. ஹராஸ் நோ நஸ்ருல் என்ற அந்த குழந்தை மூச்சடைத்த நிலையில் முகத்தில் எறும்புகள் சூழ்ந்த நிலையில் கிடைப்பதைத் கண்ட குழந்தை பராமரிப்புப் பெண்மணி, பின்னர் குழந்தையின் தந்தைக்கு தொடர்பு கொண்டு தகவலை கூறியுள்ளார்.
அருகாமையில் வசித்து வந்த குழந்தையின் பாட்டி, தகவல் கிடைத்து அந்த குழந்தையை மெர்லிமாவில் உள்ள கிளினிக்கிற்கு அவசரமாக தூக்கிச் சென்றுள்ளார். ஆனால், குழந்தை இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டதாக குழந்தையின் தாயார் 25 வயது ஆயினோல் இஸா ரஸ்லான் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் தங்களின் ஒரே குழந்தையையும் பறிகொடுக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு தாங்கள் ஆளாகியிருப்தபாக அவர் குறிப்பிட்டார்.








