ஜொகூர் பாரு,ஜன.4
ஆடவர் ஒருவரை கொலை செய்ததாக இரு இந்திய சகோதரர்கள், ஜோகூர்பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
20 வயது பி.ஜக்டீஸ் ராஜ், அவரின் சகோதரரான 21 வயது பி. வசந்த ராஜ் மற்றும் இன்னும் பிடிபடாமல் இருக்கும் மேலும் மூவருடன் சேர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி முஹமாட் ஷஃபிக் அப்துல் லத்திஃப் என்பவரை கொலை செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இவர்கள் இக்கொலை குற்றத்தை ஜோகூர்பாரு, ஜாலான் ட்ரஸ் – ஜாலான் உங்கு புவான் சாலை சந்திப்பில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி நுருல் ஃபரஃபா முஹமாட் சுவா முன்னிலையில் நிறுத்தப்பட்ட ஜக்டீஸ் ராஜ் மற்றும் வசந்த ராஜ், தங்களுக்கு எதிரான குற்றச்சசாட்டு வாசிக்கப்பட்ட போது குற்றத்தின் தன்மையை புரிந்து கொள்ள முடிவதாக தெரிவித்தனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் இரு சகோதரர்களும் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அந்த இரு சகோதரர்களிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இவ்வழக்கு விசாரணை வரும் மார்ச் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








