கோலாலம்பூர், மார்ச்.01-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சிறிய பெட்டிகளுக்குள் அடைத்து நான்கு சியாமாங் குரங்குகளை இந்தியாவுக்குக் கடத்த முயன்ற 38 வயதுடைய மலேசியப் பெண் ஒருவரை வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று இரவு திருச்சி நோக்கிச் செல்லவிருந்த அந்தப் பெண்ணின் பயணப் பெட்டிகளைச் சோதனையிட்ட போது, சட்டத்திற்குப் புறம்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த அரிய வகை குரங்குகள் கண்டறியப்பட்டதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காடீர் அபு ஹாஷிம் தெரிவித்தார்.
சியாமாங் குரங்குகள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் என்பதால், உரிய அனுமதியின்றி அவற்றை வைத்திருப்பது அல்லது ஏற்றுமதி செய்வது கடுமையான குற்றமாகும் எனத் தெரிவித்த அப்துல் காடீர், இது குறித்து வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010-இன் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு அதிக அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.








