பெட்டாலிங் ஜெயாவிலிருந்து கோலாலம்பூர் வரை காரில் தப்பியோடிய தேடப்பட்டு வந்த 3 குற்றவாளிகள் உட்பட நான்கு சந்தேக நபர்களைப் போலீசார் இன்று அதிகாலை சினிமா பாணியில் துரத்திப் பிடித்தனர்.
இன்று அதிகாலை கோத்தா டாமன்சாராவில் உள்ள எண்ணெய் நிலையம் அருகே போலீசார் ஒரு கருப்பு நிற காரை நிறுத்த முயன்றனர். ஆனால், காரை நிறுத்தாமல் ஓட்டுநர் அதிவேகமாகத் தப்பியோடினார். கோலாலம்பூர், செமாராக் பகுதியில் உள்ளஜாலான் ஏர் ஜெர்னி வரை ஆபத்தான முறையில் சென்ற அந்த காரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
இது குறித்து பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் துணை ஆணையர் ஷம்சுடின் மாமட் கூறுகையில், அந்த காரில் இருந்து ஒரு அரிவாள் மற்றும் வீட்டின் பூட்டை உடைக்கப் பயன்படும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார். கைது செய்யப்பட்ட நால்வர் மீதும் ஒட்டுமொத்தமாக 56 குற்றப் பின்னணிகள் உள்ளன. அவர்கள் அனைவரும் நாளை மே 29 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.








