இணையம் வழி பழகிய பெண் ஒருவரின் மூன்று வயது ஆண் குழந்தையைக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு கிள்ளான் உயர் நீதிமன்றம் இன்று மரணத் தண்டனை விதித்தது.
எஸ். தேவந்தகுமார் என்ற அந்த லோரி ஒட்டுநர், கடந்த 2021 டிசம்பரில், கிள்ளான், தாமான் செந்தோசாவில் உள்ள ஒரு வீட்டில் இந்த கொடூர குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நாற்காலி, இடைவார்பட்டை மற்றும் துணி மாற்றும் கொக்கிகளால் கே. நிதிஷ், என்ற மழலையர் பள்ளி சிறுவனை, தேவந்தகுமார் இரக்கமின்றி கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அச்சிறுவனின் தலை, ஐந்து நிமிடங்களுக்கும் மேலாகத் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான்.
வழக்கை விசாரித்த நீதிபதி நோர்லிசா ஒத்மான், தற்காத்துக் கொள்ள முடியாத ஒரு குழந்தைக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்தச் செயல் மிகக் கொடூரமானது என்றும், இதற்குக் தூக்குத் தண்டனை மட்டுமே பொருத்தமான தண்டனை என்றும் தனது 32 பக்கத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.








